ஷா ஆலம், ஜன 3- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை மாநில அரசு விரிவுபடுத்தும் என வட்டார மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடக்க கட்டமாக் இச்சேவை ஸ்ரீ மூடா மையப்பகுதியில் தொடங்கி ஸ்ரீ மூடா போலீஸ் நிலையம், ஜாலான் ஹஸ்ராட் நிறுத்தம், என்.எஸ்.கே. பேரங்காடி, பெட்ரோன் ஸ்ரீ மூடா, அண்டோரா அடுக்குமாடி குடியிருப்பு வழியாக மீண்டும் நகரின் மையப்பகுதியில் முடிவடையும்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட இந்த மோசமான வெள்ளத்தில் அனைத்து வாகனங்களும் சேதமடைந்து விட்டதால் அன்றாட நடவடிக்கைகளுக்காக வெளியில் சென்று வர மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாக ஸ்ரீ மூடா குடியிருப்பாளரான என். ராம மூர்த்தி (வயது 49) கூறினார்.
மாநில அரசின் இந்த இலவச பஸ் சேவைத் திட்டம் வரவேற்க க்கூடிய ஒன்றாக விளங்குகிறது. எனினும், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
கூடுதலாக பல பகுதிகளுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் பட்சத்தில் அதிகமான மக்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.