கோலாலம்பூர், ஜன 4- வெள்ளம் காரணமாக ஜொகூர், பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் உள்ள 188 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 15,000 த்திற்கும் மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜொகூரில் நேற்று மா 4,278 ஆக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை நேற்றிவு 8.00 மணியளவில் 4,737 ஆக உயர்ந்துள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்தியாநந்தன் கூறினார்.
நேற்று இரவு 8.00 மணி நிலவரப்படி, ஜொகூரில் எட்டாக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை ஏழாக குறைந்ததாக கூறிய அவர், இம்மாவட்டங்களில் மொத்தம் 71 துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
பகாங்கில் வெள்ள நிலைமை சற்று சீரடைந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாக செயல்குழு கூறியது. நேற்று மாலை 55 துயர் துடைப்பு மையங்களில் 2,572 பேர் தங்கியிருந்த வேளையில் நேற்றிவு துயர் துடைப்பு மையங்களின் எண்ணிக்கை 46 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,438 ஆகவும் குறைந்ததாக அது தெரிவித்தது.
மலாக்காவில், நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி 667 குடும்பங்களைச் சேர்ந்த 2,591 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர். நேற்று மாலை 4.00 மணியளவில் 674 மையங்களல் 2,621 பேர் தங்கியிருந்தனர்.
நெகிரி செம்பிலானில் நேற்று மாலை 568 குடும்பங்களைச் சேர்ந்த 2,073 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த வேளையில் நேற்றிரவு அந்த எண்ணிக்கை 1,967 ஆக குறைந்தது. இவர்கள் அனைவரும் 21 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூரில் கோல லங்காட் மாவட்டத்திலுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 40 பேர் இன்னும் தங்கியுள்ளனர். கிளானாங் சமூக மண்டபத்தில் 25 பேரும் பந்திங் கிராம சமூக நிர்வாக பாலாய் ராயாவில் 15 பேரும் இன்னும் அடைக்கலம் நாடியுள்ளனர்.