கோலாலம்பூர், ஜன 7– வெள்ளப் பிரச்னையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை விளக்குவதற்காக 14 ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடரின் சிறப்புக் கூட்டம் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வெள்ளப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற இந்தச் சிறப்புக் கூட்டம் சிறந்த மேடையாக விளங்குவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
மக்களவையின் நிரந்தர விதி 11 (3) க்கு ஏற்ப இந்த சிறப்பு அமர்வு நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய நலன் சார்ந்த அதாவது வெள்ளம் மற்றும் அதற்கு பிந்தைய உதவித் திட்டங்களை மலேசிய குடும்பத்திற்காக ஒருங்கிணைக்கவும் நீண்டகால வெள்ள மேலாண்மைத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த சிறப்பு சிறப்பு அமர்வுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.