ஷா ஆலம், ஜன 7– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15,174 குடும்பங்களுக்கு 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோல லங்காட்டில் வெள்ளத்தால் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு 10,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டதாக கூறிய அவர், இதனுடன் சேர்த்து மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கான உதவித் தொகை பெற்றவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது என்றார்.
பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 5,845 பேரும் உலு லங்காட்டில் 2,602 பேரும் கிள்ளானில் 2,304 பேரும் உதவித் தொகையைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கோல லங்காட்டில் 1,845 பேருக்கும் கோல சிலாங்கூரில் 1,502 பேருக்கும் சிப்பாங்கில் 904 பேருக்கும் கோம்பாக்கில் 444 பேருக்கும் உலு சிலாங்கூரில் 51 பேருக்கும் சபாக் பெர்ணமில் 35 பேருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது என்று தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்ட விளக்கப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்தது.