ஷா ஆலம், ஜன 7– மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நிறுவனப் பங்குகளை வைத்திருந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மௌனம் சாதிக்க க்கூடாது என வலியுறுத்திய அந்த எதிர்க்கட்சி கூட்டணி, அந்த ஊழல் தடுப்பு அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான சம்பவங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது குறித்து விளக்கப்பட வேண்டும் என்று கோரியது.
அந்நிய நாடுகளுக்கான உளவு அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ ஹஸ்னா அப்துல் ஹிமிட்டுக்கு சொந்தமான இரண்டரை கோடி வெள்ளி களவு போன சம்பவத்தில் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு உள்ளிட்ட விவகாரங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கை கூறியது.
எம்.ஏ.சி.சியின் நடப்பு ஆணையர் மட்டுமின்றி முன்பு அப்பதவியை வகித்த அனைத்து ஆணையர்கள் மீதும் எம்.ஏ.சி.சியின் தொடர்பு அறவே இல்லாத சுயேச்சை அமைப்பு ஒன்று விசாரணை நடத்த வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டையும் அது மீண்டும் மறுவுறுதிப்படுத்தியது.
இத்தகைய சர்ச்சைக்குரிய விவகாரங்களால் அந்த ஆணையத்தின் நற்பெயருக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் போன்ற அனைத்துலக அமைப்புகள் மத்தியிலும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக ஹராப்பான் கூட்டணி தெரிவித்தது.
இந்த அறிக்கையில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கினபாலு முன்னேற்றக் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ மேடியஸ் தெங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.