கோலாலம்பூர், ஜன 9 - கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக மொத்தம் 11 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மரண எண்ணிக்கை இதுவாகும். சுகாதார அமைச்சின் கோவிட்நவ் அகப்பக்க பதிவின்படி சிலாங்கூரில் ஆறு மரணங்களும் கிளந்தான், பெர்லிஸ், சபா, சரவாக் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து நாட்டில் நேற்று வரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, நாட்டில் மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 79 ஆயிரத்து 927 பேர் அல்லது 97.7 சதவீதம் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர். மேலும் 98.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 65 ஆயிரத்து 398 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. 12 , முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 65 ஆயிரத்து 273 பேர் அல்லது 87.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். இதற்கிடையில், 1,241 முதல் டோஸ் தடுப்பூசிகள், 1,086 இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் மற்றும் 122,667 ஊக்கத் தடுப்பூசிகள் என மொத்தம் 124,994 தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன.