கோலாலம்பூர், ஜன 13- கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இவ்வாண்டு தைப்பூச விழாவில் காவடி மற்றும் பால்குட ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பால் குட நேர்த்திக் கடன் செலுத்த பக்தர்களுக்கு வரும் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 19 ஆம் தேதி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் கூறினார்.
பால் குட ஊர்வலத்துடன் வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆலயத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும் என்றும் அவர் சொன்னார்.
ஒவ்வொரு வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் 30 நிமிடங்கள் வழங்கப்படும். அதன் பின்னர் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளபட வேண்டும். பத்து கேவ்ஸ் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தானத்தில் பால் குட ஊர்வலத்தில் 100 பேருக்கும் மேல் கலந்து கொள்ள முடியாது என்றார் அவர்.
மேலும், பினாங்கு ஜோர்ஜ் டவுன் அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயம் மற்றும் நகரத்தார் தண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ, இந்து பரிபாலன சபை ஆலயம், சுங்கை சிப்புட், ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான பரிபாலன சபை ஆகிய ஆலயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த பிரதான ஐந்து ஆலயங்கள் தவிர்த்து இதர ஆலயங்களில் பால் குட ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 30 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
பால் குடம் ஏந்தி வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆலய நிர்வாகத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார்.