ஷா ஆலம், ஜன 14- இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவம் வரை பயிலும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் வரும் திங்கள் கிழமை தொடங்கி பி.ஏ.பி. எனப்படும் பள்ளித் தொடக்க உதவித் திட்டத்தின் கீழ் தலா 150.00 வெள்ளியைப் பெறுவர்.
வரும 2022/2023 பள்ளித் தவணைக்கான இந்த சிறப்பு உதவி நிதி மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காக கொண்டு வழங்கப்படுவதாக கல்வியமைச்சு கூறியது.
2021/2022 கல்வித் தவணையில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் படிவம் வரை பயின்ற மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.
மேலும், இவ்வாண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் வகுப்பில் சேர்வதற்கு பதிந்து கொண்டுள்ள மாணவர்கள் தொடர்பான பதிவு நடவடிக்கைகள் முற்றுப் பெற்றவுடன் இந்த உதவித் தொகையை பகிர்ந்தளிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படும். வங்கி கணக்கு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் இத்தொகை சேர்க்கப்படும். இந்த நிதி வழங்கும் நிகழ்வு எஸ்.ஒ.பி. விதிகளுகேற்ப நடத்தப்படும்.
மாணவர்கள் புதிய கல்வித் தவணையைத் தொடங்கும் போது பெற்றோர்களுக்கு ஏற்படக்கூடிய செலவினங்களை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கல்வியமைச்சு மேலும் கூறியது.