ஷா ஆலம், ஜன 26- இங்குள்ள செக்சன் 15 பகுதியில் உடைந்த குடிநீர்க் குழாயை பழுதுபார்க்கும் பணியில் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தீவிரமாக ஈடுபடுகிறது.
கூட்டரசு நெடுஞ்சாலைக்கு அருகே மூன்றாம் தரப்பினரால் அந்த குழாய் நேற்று சேதமடைந்தது. இதனால் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் உள்ள 142 பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணிகள் இன்று மாலை 3.00 மணிக்கு தொடங்கி நாளை விடிற்காலை 3.00 மணியளவில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும். இடம் மற்றும் தொலைவைப் பொறுத்து நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் நேரம் மாறுபடும் என்றும் அது தெரிவித்தது.
நீர் விநியோகத் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு குறிப்பாக அத்தியாவசிய தேவை உள்ள இடங்களுக்கு கொள்கலன் லோரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தொடர்பான மேல் விபரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.