கோலாலம்பூர், ஜன 27- இம்மாதம் முதல் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 4,633 மாணவர்களை உட்படுத்திய 107 நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
2022 ஆம் ஆண்டிற்கான கல்வித் தவணை தொடங்கியது முதல் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கையில் அபரிமித அதிகரிப்பைக் கண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த 107 நோய்த் தொற்று மையங்களில் 56 அல்லது 52.3 விழுக்காடு கல்வியமைச்சின் கல்விக் கூடங்கள் சம்பந்தப்பட்டவையாகும். அதற்கு அடுத்த நிலையில் இதர கல்விக் கூடங்களும் (24.3 விழுக்காடு) உயர் கல்விக் கூடங்களும் (20.6) தனியார் உயர்கல்விக் கூடங்களும் (2.8 விழுக்காடு) உள்ளதாக அவர் தெரிவித்தார்.
2022 முதலாவது நோய்த் தொற்று வாரத்தில் மூன்று நோய்த் தொற்று மையங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. இரண்டாது நோய்த் தொற்று வாரத்தில் அதாவது பள்ளித் தவணை தொடங்கிய போது அந்த எண்ணிக்கை 15 ஆகவும் மூன்றாவது வாரத்தில் 313 விழுக்காடாகவும் உயர்வு கண்டது என்றார் அவர்.
இவ்வாண்டு ஜனவரி 25 ஆம் தேதி வரையிலான நான்காவது நோய்த் தொற்று வாரத்தில் 26 நோய்த் தொற்று மையங்கள் பதிவு செய்யப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி தொடர்புடைய 4,633 நோய்த் தொற்று சம்பவங்களில் 4,092 அதாவது 88.3 விழுக்காடு இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் எஞ்சிய 112 சம்பவங்கள் அல்லது 2.4 ஊக்கத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.