ஷா ஆலம், ஜன 27- வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் இரண்டாம் கட்டப் பணி வரும் மே மாதம் வரை நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறுகிறது.
வீடுகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு கடந்த 16 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்த போதிலும் குப்பைகள் வீசும் போக்கு பொது மக்கள் மத்தியில் இன்னும் தொடர்வதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
கடந்த பத்து நாட்களாக பொதுமக்கள் கட்டில், மெத்தை, பழுதடைந்த தளவாடங்கள் போன்ற பொருள்களை சாலையோரங்களில் வீசி வருகின்றனர். அவற்றை அகற்றுவது எங்களின் பணி என்பதால் அதனை நாங்கள் முறையாக மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.
இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சுமார் 3,000 டன் குப்பைகளை தமது நிறுவனம் அகற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போது நாங்கள் இரண்டாம் கட்டத் துப்புரவு பணியில் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது. கால்வாய்களை அடைத்துக் கொண்டிருக்கும் சகதிகளை வெளியேற்ற வேண்டியுள்ளது. எனினும், திடக்கழிவுகளை அகற்றும் பணியை இன்னும் முடிக்க இயலாத நிலையில் இரண்டாம் கட்ட துப்புரவு பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது மற்றும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வது ஆகியவற்றை இலக்காக கொண்டு இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி கடந்த 8 ஆம் தேதி தொடங்கப்பட்டது.