கோலாலம்பூர், ஜன 28- நாட்டில் நேற்று 109,251 பெரியவர்களுக்கு பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 31 ஆயிரத்து 403 ஆக அல்லது 49.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதனிடையே 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 716 பெரியவர்கள் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
மேலும், 2 கோடியே 31 லட்சத்து 99 ஆயிரத்து 172 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 85 ஆயிரத்து 992 பேர் அல்லது 88.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 66 ஆயிரத்து 545 பேர் அல்லது 91.1 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று 203,613 பேருக்கு கோவிட்.19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் 1,660 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 2,702 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 31 லட்சத்து 577 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 10 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.