ஷா ஆலம், ஜன 30- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 70,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளதோடு இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று செல்கேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி தெங்கு லெஸ்தா தெங்கு அலாவுடின் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக நேரடியாக முன்பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 157,000 தடுப்பூசிகளை மாநில அரசு தயார் செய்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் மாநிலத்திலுள்ள செல்கேர் கிளிக்குகளில் வழங்கப்படுகின்றன. இது தவிர, மாநிலத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இம்மாதம் 14 ஆம் தேதி வரை ஊக்கத் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
ஊக்கத் தடுப்பூசி சேவை வழங்கும் கிளினிக்குளின் பட்டியலை https://selcareclinic.com/our-clinics/ என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.