ஷா ஆலம், ஜன 30– சீனப்புத்தாண்டை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 450 பேருக்கு ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
பொது மக்களிடமிருந்து அதிகமான விண்ணபங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து 10,000 வெள்ளி மதிப்பில் கூடுதலாக 100 பற்றுச் சீட்டுகள் இத்தொகுதி மக்களுக்கு ஒதுக்கப்படுதாக சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
இந்த உதவியைப் பெற்றவர்களில் 90 விழுக்காட்டினர் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல் உதவி அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம் என அவர் சொன்னார்.
இந்த ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை பெற்றவர்கள் பலர் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர், மூத்த குடிமக்கள் மற்றும் தணித்து வாழும் தாய்மார்களாவர் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பெக்கவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல மன்றத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட 100 வெள்ளி மதிப்பிலான 30 பற்றுச் சீட்டுகளும் தகுதி உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் கோத்தா கெமுனிங் ஜயண்ட் பேரங்காடி மற்றும் அருகிலுள்ள 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
மாநில மக்களின் சமூக நலன் மற்றும் சுபிட்சத்தை நீண்ட கால அடிப்படையில் காக்கும் நோக்கில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்தை மாநில அரசு தொடக்கியது.