உலு சிலாங்கூர், ஜன 31- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் புத்தாக்க மறுசுழற்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டு காலத்தில் 8 டன் மறுசுழற்சிப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. கோல குபு பாரு, டேசா மெலோர் பாரு செரண்டா வீடமைப்புப் பகுதி, புக்கிட் பெருந்தோங் அடினியம் வீடமைப்பு பகுதி, புக்கிட் பெருந்தோங் ஜாலான் இனாய் வீடமைப்பு பகுதி, களும்பாங், தாமான் ராஜாவாலி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிடினா எனும் முன்னோடித் திட்டத்தின் வாயிலாக இப்பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அடினியம் வீடமைப்பு பகுதியில் மிக அதிகமாக 2.5 டன் மறு சுழற்சிப் பொருள்கள் சேகரிக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார். இந்த சிடினா திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் 2.5 டன் கரியமிலவாயு காற்றில் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் மறுசுழற்சியின் மூலம் வருமானம் ஈட்டுவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த சிடினா திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் குப்பை சேகரிப்பு மையங்களில் குவியும் குப்பையின் அளவைக் குறைக்கவும் உபரி வருமானம் ஈட்டவும் வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-30-at-12.20.05-PM-2-1-960x640.jpeg)