ஷா ஆலம், பிப் 1– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து மாநில அரசு ஆராயவிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று நவீன விவசாயம் மற்றும் அடிப்படை விவசாய தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷம் கூறினார்.
எனினும், அத்தரப்பினரிடமிருந்து உதவி கோரும் எந்த மனுவையும் இதுவரை தாங்கள் பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில் சீனப்புத்தாண்டிற்கு பிறகு அவர்களிடமிருந்து உதவிக்கான விண்ணப்பங்கள வரக்கூடும். இத்த்துறைக்கு பொறுப்பான நிறுவனங்கள் அல்லது இலாகாக்களிடமிருந்து அதிகாரப்பூர்வ புகாருக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவ 1 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மாநில அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி அறிவித்திருந்தது.