ஷா ஆலம், பிப் 2– சீனப்புத்தாண்டையொட்டி அமல் செய்யப்பட்ட ஓப்ஸ் செலாமாட் 17 சாலை பாதுகாப்பு இயக்கத்தின் முதல் நான்கு நாட்களில் 1,420 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
எனினும், கடந்தாண்டு சீனப்புத்தாண்டு சமயத்தில் அமல் செய்யப்பட்ட ஒப்ஸ் செலாமாட் 16 இயக்கத்தின் போது பதிவானதை விட இது 634 சம்பவங்கள் அல்லது 30.87 விழுக்காடு குறைவானதாகும் என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு சீனப்புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் மாநிலத்தில் 2,054 விபத்துகள் பதிவு செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது நெடுஞ்சாலைகளில் 96 விபத்துகளும் கூட்டரசு சாலைகளில் 182 விபத்துகளும் மாநிலச் சாலைகளில் 825 விபத்துகளும் நகர சாலைகளில் 98 விபத்துகளும் நிகழ்ந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
இக்காலக்கட்டத்தில் சாலை விபத்துகள் சம்பந்தப்பட்ட எட்டு மரணச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறிய அவர், அவை அனைத்தும் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டவை என்றார்.
கடந்தாண்டு சீனப்புத்தாண்டின் போது இதே காலக்கட்டத்தில் 14 மரணச் சம்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 11 மோட்டார் சைக்கிளோட்டிகளும் மூன்று பாதசாரிகளும் சம்பந்தப்பட்டவையாகும் என்றார் அவர்.