ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை 5,736 ஆக உயர்வு கண்டது

கோலாலம்பூர், பிப் 3- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த இரு தினங்களாக ஐயாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 5,566 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,736 ஆக ஏற்றம் கண்டது.

இந்த  புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 82 ஆயிரத்து 060 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்  ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று நோய்த் தொற்று கண்டவர்களில் 46 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சியோர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் 183 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் உள்நாட்டில் 5,553 சமபவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 112 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 54 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து 3,196 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து அந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 90 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட எட்டு நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது என நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.


Pengarang :