ஷா ஆலம், பிப் 3- கோலக் கிள்ளான் கடலோரப் பகுதியில் இன்று காலை கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் இருந்ததாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு கூறியது.
இன்று காலை 7.33 மணியளவில் கடலில் நீர் மட்டம் மிதமான அளவு அதாவது 4.9 மீட்டராக இருந்ததாக அப்பிரிவின் துணை நிர்வாக அதிகாரி முகமது இஸாட் ஹபிஸ் முகமது நாசீர் கூறினார்.
வெள்ளம் ஏற்படும் அளவுக்கு கடல் நீர் கரை புரண்டோடும் சம்பவம் ஏதும் நிகழவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நிகழவில்லை என்றார் அவர்.
இம்மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கிள்ளான் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களில் கடல் பெருக்கு ஏற்படும் என்று தேசிய ஹைட்ரோகிராபிக் மையம் கூறியிருந்தது.
கெடா மாநிலத்தின் கோல கெடா, பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ, ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் மற்றும் பத்து பகாட்டிலும் இதே நிலை நீடிக்கும் என்றும் அது தெரிவித்தது.