ஷா ஆலம், பிப் 6- மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக முட்டை விலையை குறைப்பது தொடர்பில் உற்பத்தியாளர்களுடன் சிலாங்கூர் அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சந்தையில் ஒரு அட்டை முட்டை வெ.12.40 விற்கப்படும் நிலையில் சிலாங்கூர் அரசு தனது துணை நிறுவனமான விவசாய மேம்பாட்டுக் கழகம் மூலம் அட்டை ஒன்றுக்கு வெ.11.30 என்ற விலையை நிர்ணயித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சந்தையை சீர்குலைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனால், முடிந்த மட்டும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் விலையை குறைக்க விரும்புகிறோம். முட்டை விலையை குறைக்க முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே, மக்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு மூலம் இந்த சலுகையை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார். நேற்று விஸ்மா பி.கே.பி.எஸ்.ஸில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். சிலாங்கூரில் போதுமான அளவு முட்டை விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசின் துணை நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் முட்டை உற்பத்தியாளர்களுடனும் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் அமிருடீன் குறிப்பிட்டார். பல பகுதிகளில் விநியோகச் சங்கிலி துண்டிக்கப்படுள்ளது. சில சமயங்களில் முட்டையின் அளவும் பற்றாக்குறைப் பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஏ கிரேடு முட்டைகள் பரவலாக கிடைக்கும் நிலையில் மக்கள் சி கிரேடு முட்டைகளையே விரும்புகின்றனர். எனவே, இந்த இவ்விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து போதுமான விநியோகத்தை உறுதி செய்வோம் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/MB-PKPS5-960x643.jpg)