ஷா ஆலம், பிப் 7- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாது என்ற மலேசிய புத்ரா பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நோய்த் கட்டுப்பாட்டு சூழல் ஈராண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேறுபட்டுள்ளதாக இணைப் பேராசிரியர் டாக்டர் மலினா ஓஸ்மான் கூறினார்.
அப்போது நாடு நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி பெறுவதற்கும் கடும் போராட்டம் நடத்தி வந்ததாக அவர் சொன்னார்.
பொருளாதாரம், கல்வி, மனநலம், சமூகவியல் மற்றும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விரிவான அளவிலான பொது முடக்கம் இனியும் ஏற்புடையதாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் உணர வேண்டும். முன்பு தடுப்பூசித் திட்டம் விரிவான அளவில் இல்லை. டெல்டா வகை நோய்த் தொற்றின் தாக்கம் கடுமையாக இருந்ததோடு சுயப் பரிசோதனைக் கருவிகளும் கட்டுப்படி விலையில் கிடைக்கவில்லை. சில தரப்பினரின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக அதன் விலை இருந்தது என்றார் அவர்.
எனினும், இப்போது நிலைமை மாறி விட்டது. தடுப்பூசித் திட்டத்தை சிறப்பான முறையில் அமல்படுத்திய நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது. தற்போது பரவி வரும் ஒமிக்ரோன் தொற்று டெல்டா திரிவுவை விட ஆபத்தானது அல்ல என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிர கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவிகளும் சந்தையில் 90 விழுக்காடு மலிவான விலையில் கிடைக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.