ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாரச் 12 ஆம் தேதி ஜோகூர் மாநிலத் தேர்தல்- பிப். 26 இல் வேட்பு மனுத்தாக்கல்

ஷா ஆலம், பிப் 9– ஜோகூர் மாநிலத் தேர்தல் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் வேளையில் தொடக்க கட்ட வாக்களிப்பு மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே  கூறினார்.

மாநில தேர்தல் ஆணையக் கூட்டம் இன்று நடைபெற்றது. காலியாக உள்ள மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக மாநிலத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 25 லட்சத்து 99 ஆயிரம் வாக்காளர்களில் 25 லட்சத்து 76 ஆயிரம் பேர் சாதாரண வாக்காளர்களாவர் என்று அவர் சொன்னார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இம்மாநிலத்தில் இருந்த 18 லட்சம் பதிவு பெற்ற வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வாக்காளர் எண்ணிக்கை 28 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்கள் இயல்பாக வாக்காளர் ஆவதற்கான நடைமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இங்கு வாக்காளர் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த  கூட்டணி அரசாங்கத்தில் உட்பூசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநில சட்டமன்றம் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கலைக்கப்பட்டது.


Pengarang :