ஷா ஆலம், பிப் 13- கோல குபு பாரு தொகுதியில் கோவிட்-19 நோயாளிகளுக்கு உணவுப் பொருள் மற்றும் கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளை விநியோகிக்கும் பணியை தொகுதி சேவை மையம் மீண்டும் தொடக்கியுள்ளது.
அண்மைய காலமாக கோவிட்-19 தோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 100 வெள்ளி மதிப்புள்ள உதவிப் பொருள்கள் வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹோங் கூறினார். கோவிட்-19 நோய் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களால் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு வெளியில் செல்ல முடியாது.
ஆகவே, அவர்களுக்குத் தேவையான பொருள்களை கேட்டறிந்து வாங்கித் தருகிறோம் என்றார் அவர். உணவுக் கூடை விநியோகத் திட்டம் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி வரை நிறுத்தப்பட்டிருந்தது. நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து உணவு மற்றும் சுயப் பரிசோதனைக் கருவிகளை வநியோகிக்கும் பணி மறுபடியும் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்களின் உதவியுடன் கோவிட்-19 நோயாளிகளை அடையாளம் கண்டு உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் தொகுதி சேவை மையம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.