ஷா ஆலம், பிப் 14- கடந்த 2020 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பின்படி நாட்டில் 3 கோடியே 24 லட்சம் பேர் உள்ளனர்.
நாட்டில் மக்கள் தொகை கடந்த பத்தாண்டு காலத்தில் 1.7 விழுக்காட்டு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 2 கோடியே 98 லட்சம் பேர் அல்லது 91.7 விழுக்காட்டினர் மலேசிய பிரஜைகளாவர் என்றும் 28 லட்சம் பேர் அல்லது 8.3 விழுக்காட்டினர் பிரஜைகள் அல்லாதவர்கள் என்றும் அவர் சொன்னார்.
இன விகிதாசாரப்படி பார்க்கையில் பூமிபுத்ராக்கள் அதிகமாக அதாவது 69.4 விழுக்காடாக உள்ளனர். அதனை அடுத்து சீனர்கள் 23.2 விழுக்காடாகவும் இந்தியர்கள் 6.7 விழுக்காடாகவும் மற்றவர்கள் 0.7 விழுக்காடாகவும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் அடங்கிய அறிக்கையை இன்று தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகையில் 52.3 விழுக்காட்டினர் ஆண்களாகவும் 47.7 விழுக்காட்டினர் பெண்களாகவும் உள்ளனர். இது 110 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகிதாசாரத்தை காட்டுகிறது என்றார் அவர்.
எனினும் புத்ரா ஜெயாவில் மட்டும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக அதாவது 100 பெண்களுக்கு 96 ஆண்கள் என்ற உள்ளதாக அவர் குறிப்பட்டார்.