கோலாலம்பூர், பிப் 15 – சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) ஆண்டு முழுவதும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார (ஒ.எஸ்.எச்) அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள 35.7 லட்சம் வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஒ.எஸ்.எச் தொடர்பான 639 திட்டங்களை செயல்படுத்த 37 அரசு சாரா நிறுவனங்கள் உதவி பெற்றதாக துணை மனிதவள அமைச்சர் டத்தோ அவாங் ஹாஷிம் தெரிவித்தார்.
“சொக்சோவிடமிருந்து நிதி உதவி பெறும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் நிதியை நன்கு நிர்வகிக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சீராகவும் திறம்படவும் இயங்குவதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.
“கடந்த ஆண்டு தொற்றுநோய் கட்டத்தின் போது, 22.5 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் 399 ஒ.எஸ்.எச் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று சொக்சோ நிதி உதவி வழங்கும் விழாவில் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சொக்சோ தலைமை நிர்வாகி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது உடன் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஜைலி டோல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒ.எஸ்.எச் குறித்த விழிப்புணர்வை சொக்சோ வளர்க்க உதவும் வகையில், ஒவ்வொரு நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓவின் நோக்கம் மற்றும் செயல்பாடு அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படுகிறது, இதனால் நாட்டில் விபத்து விகிதம் குறைகிறது என்றார்.
கடந்த ஆண்டு முழுவதும், சொக்சோ 56,990 விபத்து பதிவுகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுள்ளது, அவற்றில் 33,096 தொழில்துறை விபத்துக்கள் மற்றும் 23,894 பயண விபத்துக்கள் ஆகும்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பணியிட பாதுகாப்பு குறித்த அலட்சியம் மற்றும் மோசமான கண்காணிப்பு ஆகியவை இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. என்றார் அவர்- பெர்னாமா