கோலாலம்பூர் பிப் 16 – கடந்த 2020 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 3 கோடியை 24 லட்சத்து 47 ஆயிரத்து 385 பேர் உள்ளனர் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
நாட்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரி வளர்ச்சி விதம் 1.7 விழுக்காடு ஆகும். மொத்த மக்கள் தொகையில் குடியுரிமை பெற்றவர்கள் 2 கோடியே 98 லட்சம் அல்லது 91.7 விழுக்காட்டினர் ஆவர். குடியுரிமை அல்லாதவர்கள் 27 லட்சம் பேர் அல்லது 8.3 விழுக்காட்டினர் என்றார்.
தொடர்ந்து, பாலினக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் 1 கோடியே 70 லட்சம் பேர் மற்றும் பெண்கள் 1 கோடியே 55 லட்சம் பேராக பதிவாகியுள்ளது என்ற கூறினார்.
மேலும், வயது வரையிலான தரவுகளின்படி, நாட்டில் 14 வயதுக்குட் பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சம் அல்லது 24 விழுக்காடு ஆகும். 15 முதல் 64 வயதுடையோர் 2 கோடியே 25 லட்சம் பேர் அல்லது 69.3 விழுக்காட்டினர். 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சம் அல்லது 6.8 விழுக்காடாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்
இன ரீதியிலான கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் 69.4 விழுக்காடாக மலாய்க்காரர்கள் உள்ளனர். அதனை அடுத்து 23.2 விழுக்காடு சீனர்கள். இந்தியர்கள் 6.7 விழுக்காடாகவும் பிற இனத்தவர்கள் 0.7 விழுக்காடாகவும் உள்ளனர். இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டில் 7.3 விழுக்காட்டில் இருந்து தற்போது 0.6 விழுக்காட்டில் சரிவு கண்டுள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 7 முதல் 2021 அக்டோபர் 31 வரையில் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, நாட்டில் உள்ள தனித்து வாழும் தாய்மார்களின் எண்ணிக்கை 8.3 விழுக்காடு அல்லது 10 லட்சத்தை நெருங்கிவிட்டதாக சிறப்பு விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமது கூறினார்.