கோலாலம்பூர் பிப் 19- நாட்டில் வேலையின்மை பிரச்சினைகளை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஜோம்கெர்ஜா கார்னிவல் விழாவும் ஒன்றாகும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
பொதுமக்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த விழா எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதையும் சந்தைப்படுத்துவதையும் பல்வேறு தளங்கள் மூலம் அதிகரிக்க மனிதவள அமைச்சு எப்போதும் பாடுபடும் என்று மலேசிய குடும்ப ஜாமீன்கெர்ஜா கார்னிவல் 2020 நிகழ்வின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
இந்த கார்னில் விழாவை இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூவமாக தொடக்கி வைத்தார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 221,966 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றதைத் தொடர்ந்து மேலும் 300,000 பேருக்கு வேலை ஏற்படுத்தித் தருவதை இலக்காக கொண்ட கொண்ட ஜாமின்கெர்ஜா வேலைவாய்ப்பு விழாவை சொக்சோ ஏற்பாடு செய்துள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
மைபியூச்சர் ஜோப்ஸ் தளத்தின் மூலம் இலக்காகக் கொள்ளப்பட்ட தரப்பினரில் வேலை இழந்தவர்கள், வேலையில்லாத பட்டதாரிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள், ராணுவ வீரர்கள், பழங்குடி சமூகத்தின் மற்றும் சுற்றுலாத் துறை ஊழியர்கள் ஆகியோரும் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய ஆள்பல தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பரில், நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதம் அல்லது 694,400 ஆகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் இந்த எண்ணிக்கை 705,000 இருந்தது என்று அமைச்சர் சொன்னார்.