கோலாலம்பூர், பிப் 22: மலேசியாவின் தற்போதைய கோவிட்-19 ஒமிக்ரோன் அலை அதிகரிப்பைக் குறைக்கவல்லதாக, ஊக்கத் தடுப்பூசி மருந்தின் செயல்திறன் காணப் படுகின்றது.
கடந்த நான்கு வாரங்களின் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரையிலான சமீபத்திய தரவு, தடுப்பூசி போடப்படாத நபர்கள் தீவிரக் கோவிட்-19 நோயால் பாதிக்கப் படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“ஊக்கத் தடுப்பூசி பெற்ற நபர்கள் ஒமிக்ரோனுக்கு எதிராக பாதுகாக்கப் பட்டுள்ளதை, 20 க்கு குறைவான வழக்குகள் பதிவாகியுள்ளது காட்டுகிறது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
இன்றுவரை, கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி (பிக்-பி) நோய்த்தடுப்புத் திட்டத்தில் அக்டோபர் 1, 2021 முதல் நேற்று வரை மொத்தம் 1 கோடியே 40 லட்சத்து 78 ஆயிரத்து 456 பேர் அல்லது 59.8 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.
இதற்கிடையில், ஜொகூர், கிளந்தான், கோலாலம்பூர் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கைகளின் பயன்பாட்டு விகிதம் 50 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.
“அது தவிர, நேற்று 25,099 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதில் 25,014 உள்ளூர் மற்றும் 85 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் ஆகும். புதிய தொற்றுகளால் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 46 ஆயிரத்து 779 ஆக உயர்ந்தது,” என்று அவர் கூறினார்.
புதிய நோய்த்தொற்றில் மொத்தம் 100 தொற்றுகள் மூன்றாம் நான்காம் மற்றும் 5 கட்டங்கள் சேர்ந்தவையாகும், மேலும் 24,499 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்திலும் இருப்பதாக அவர் கூறினார்.
நேற்று மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,749 ஆகப் பதிவாகியுள்ளன, இது நாட்டில் ஒட்டுமொத்தமாகக் குணமடைந்த தொற்றுகள் 2,955,404 ஆக உயர்ந்துள்ளது