கோல பெராங், பிப் 27– வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் துயர் துடைப்பு மையங்களுக்கு கொண்டுச் செல்வது ஆகிய பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய திராங்கானு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
தற்போது தமது துறையின் ஹெலிகாப்டர் ஒன்று நோயாளி ஒருவரை புலாவ் பெர்ஹெந்தியானிலிருந்து கோல திரங்கானு சுல்தானா நோர் ஜஹாய்ரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில தீயணைப்புத் துறை இயக்குநர் முகமது ஹலிமான் அப்துல் ரஷிட் கூறினார்.
இதன் பின்னர் அந்த ஹெலிகாப்படர் படகுகள் நுழைய முடியாத நிலையிலிருக்கும் உலு திரங்கானுவிலுள்ள லுபோக் பாய்ட் பகுதிக்குச் சென்று அங்குள்ள வெள்ள நிலவரங்களைப் பார்வையிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக லுபோக் பாய்ட் பகுதி விளங்குகிறது. இங்கு அதிகாலை முதல் வெள்ளம் வேகமாக உயர்ந்து வருவதோடு துயர் துடைப்பு மையங்களிலும் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இப்பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டின் கூரைகளிலும் மேடான பகுதிகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.