ECONOMYNATIONALSMART SELANGOR

2017 முதல் ஆர்.எஃப்.ஐ.டி. டோல் கட்டண முறையின் பயன்பாடு 18% அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 1– நாட்டில் டோல் கட்டணம் செலுத்துவதற்கான வானொலி அலைவரிசை அடையாள முறை (ஆர்.எஃப்.ஐ.டி.) அல்லது மைஆர்.எஃப்.ஐ.டி. கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் அந்த முறையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஸ்மார்டெக் கார்டுகளில் பயன்படுத்தப்படும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ஆர்.எஃப்.ஐ.டி முறையிலுள்ள தொழில்நுட்பம் ஆக்ககரமான பயனைத் தரக்கூடியதாக உள்ளதாக பொதுப்பணித்துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ படிலா யூசுப் கூறினார்.

பல வழித்தட போக்குவரத்து முறையைப் பொறுத்தமட்டில், ஸ்மார்ட்டெக் கார்டுகளில் பயன்படுத்தப்படும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பம் ஆக்ககரமான பலனைத் தருவது இன்னும் நிரூபணமாகவில்லை. அதே சமயம், டோல் கட்டணங்களை வசூலிப்பதில் ஆர்.எஃப்.ஐ.டி முறை பல நாடுகளில் பல நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

வழி நில்லா டோல் கட்டண வசூலிப்பு முறையை அமல்படுத்தும் அமைச்சின் நோக்கத்திற்கேற்ப இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் முழுமையாகப் பயன்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

மக்களவையில் இன்று சபாக் பெர்ணம் உறுப்பினர் டத்தோ முகமது ஃபாசியா முகமது பாக்கே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கரை நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் ஆர்.எஃப்.ஐ.டி. டோல் கட்டண முறையின் அமலாக்கம் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :