கோலாலம்பூர், மார்ச் 3 – குறைந்தபட்ச ஊதியத் திட்ட அமலாக்கத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்க் கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த பட்ச சம்பள உயர்வுக்கு எதிரான பெரு நிறுவனங்களின் ஆட்சேபணைகளுக்கு அடிபணியாமல் அந்த ஊதியக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று
அவர் கூறினார்.
நாட்டிலுள்ள சில பெரிய நிறுவனங்கள் அதிக உற்பத்தித் திறன் காரணமாகப் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. இருப்பினும், குறைந்தபட்ச ஊதியக் கொள்கையை அமல்படுத்துவதை அவை எதிர்க்கின்றன என்று அவர் சொன்னார்.
கோடிக்கணக்கான வெள்ளியை வருமானமாக ஈட்டிய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் குறைந்தபட்ச ஊதியம் பற்றிய விவாதங்களில் அரசாங்க நிலையில் மட்டுமின்றித் தனியார் துறையினரிடையேயும் தயக்கம் காணப்படுகிறது என்றார் அவர்.
வெட்டு மரம் மற்றும் செம்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால், கீழ் நிலை தொழிலாளர்களுக்கு அவை தரும் தொகை மிகக் குறைவு என்று மக்களவையில் விவாதத்தின் போது அவர் சொன்னார்.
பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கு எதிரான ஊதிய உயர்வு மிகவும் குறைந்த அளவில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, குறைந்தபட்ச ஊதியக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் முழுக் கடப்பாட்டுடன் செயல்படும் அதேவேளையில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய வார்ப்பினை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறோம் என்றார்.