சுபாங் ஜெயா, மார்ச் 4 - பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.பி.ஜே.) வழங்கிய சுரண்டி காட்சிக்கு வைக்கும் கார் நிறுத்துமிடக் கூப்பன்களை இன்னும் பயன்படுத்தாமலிருப்பவர்கள் அதனை திரும்பக் கொடுத்து அதற்கானத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் அலுவலகத்தில் கூப்பன்களுக்கானத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமட் அஸான் முகமது அமீர் கூறினார். கூப்பன் விற்பனை முகவர்கள் உட்பட அனைவரும் கூப்பன்களை ஈடு செய்யலாம். இதனால் அவர்கள் எந்த நஷ்டத்தையும் அடைய மாட்டார்கள். மாறாக, அதற்கான பணத்தை திரும்பப் பெறுவார்கள் என்று அவர் சொன்னார். சுரண்டி காட்சிக்கு வைக்கும் கார் நிறுத்துமிடக் கூப்பன்களின் பயன்பாட்டை நிறுத்தவுள்ளதாக சிலாங்கூர் அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) மொபைல் செயலி வழி மின்-கூப்பன்களை அமல்படுத்துவதாகவும் அது அறிவித்தது. காகித வடிவிலான கார் நிறுத்துமிடக் கூப்பன்களை இம்மாத இறுதி வரை பயன்படுத்தலாம் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் ஜனவரி 4 ஆம் தேதி கூறியிருந்தார். இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு 1-700-81-9612 அல்லது மின்னஞ்சல் [email protected] தொடர்பு கொள்ளலாம்
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2019/10/PSX_20191031_134605-960x640.jpg)