ECONOMYHEALTHNATIONAL

நேற்று 28,298 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு- 214 பேருக்குக் கடும் பாதிப்பு

கோலாலம்பூர், மார்ச் 17- நேற்று 28,298 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 214 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எஞ்சிய 28,084 பேர் நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 433 அக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று 33,099 பேர் குணமடைந்த வேளையில் இந்நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரத்து 033 ஆகப் பதிவாகியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 214 நோயாளிகளில் 56 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் எனக் கூறிய அவர், மேலும் 101 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர் என்றார் அவர்.

மேலும் 57 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் 119 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர்.

அவர்களில் 82 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட  நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று 1,743 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 743 மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 1,000 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளனர்.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 374 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 233 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :