ALAM SEKITAR & CUACAHEALTHNATIONAL

டிங்கி பரவல் இடங்கள் சாதனம் மூலம் கண்காணிப்பு- சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், மார்ச் 28- சிலாங்கூரில் டிங்கி பரவும் இடங்களைக் கண்காணிக்க டிரோன் சாதனத்தைப் பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அந்நோய்ப் பரவல் அதிகம்  உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்காக செயலி ஒன்றையும் மாநில அரசு உருவாக்கும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இத்திட்டம் இன்னும் விவாத நிலையில்தான் உள்ளது. வெகு விரைவில் டிங்கி பரவலை நாம் டிரோன் சாதனம் மூலம் கண்காணிக்கவுள்ளதோடு  மையப் பகுதிகளில் மருந்தும் தெளிக்கவிருக்கிறோம் என்றார் அவர்.

அண்மையில் மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களில் தூய்மையை எப்போதும் பேணிவர வேண்டும் என்பதோடு ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படாத காரணத்தால் பலர் அந்நோய் விஷயத்தில் அலட்சியமாக உள்ளனர். சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரம் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு  முதல்  மார்ச் 5ஆம் தேதி வரையிலான 5வது நோய்த்  தொற்று வாரத்தில் சிலாங்கூரில்  டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 35.9 விழுக்காடு அதிகரித்து 1,122 ஆக பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :