கோலாலம்பூர், ஏப்ரல் 3: கடந்த வெள்ளியன்று நாடு எண்டெமிக் கட்டத்தில் நுழைவதாக , அரசாங்கம் அறிவித்த பின் ஏற்பட்ட சில தளர்வுகளின் பயனால் மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக ஏராளமான முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் வழிபாட்டு தளங்களை நிரப்புவதாக பெர்னாமா கூறுகிறது.
சகோதரத்துவத்தையும் நட்பையும் வலுப்படுத்த அவர்களில் பெரும்பாலோர் இந்த தளர்வை நன்கு பயன்படுத்திக் கொண்டதாகவும், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் போன்ற வைபவங்களுக்கும் ஆலயத்தில் கூடுவதாக பெர்னாமா நடத்திய ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
கோலாலம்பூரில், ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்வாமி கோவிலில், இங்குள்ள பத்து மலையில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்துக்கள் தங்கள் வழக்கமான பிரார்த்தனைகளைச் செய்யத் திரும்பினர், மேலும் பெரும்பாலான பக்தர்கள் கடந்த ஜனவரியில் தைப்பூச விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டதை இப்பொழுது பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வாலயத்தின் தலைமை ரவிநாத குருக்கள் இன்று பெர்னாமாவைச் சந்தித்தபோது, இந்து பக்தர்கள் கடந்த இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் 272 படிகள் ஏறிச் சென்று பால் குடம் ஏந்தியோ, தலைமுடி காணிக்கையோ அல்லது தங்கள் குழந்தைகளுக்காக கரும்பு காவடி எடுப்பது போன்ற பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
காமச்சி சுப்பிரமணியம், 70, என்ற வயதான பெண்மணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியாள கட்டுப்பாடுகள் அகன்று, இப்பொழுது வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று திரும்ப முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
“தைப்பூசத்தின் போது கோவிலுக்கு செல்ல முடியாமல் போனதால், தற்போது முருகப்பெருமானிடம் ஆசி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
“நாம் எண்டெமிக் கட்டத்தை நெருங்கிவிட்டாலும், முகக்கவரி அணிந்து, MySejahtera செயலியில் சரிபார்த்து, கோவிட்-19-தை தடுப்பதற்கான அவசியமானதை செய்ய தவறக்கூடாது என்றார். ஆகையால் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOPs) இணங்குவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.” என அவர் சொன்னார்.
சிலாங்கூரில், எண்டெமிக் கட்டத்திற்கு மாறுவதை ஒட்டி, ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான மிட்லெண்ட்ஸ் கோவிலில், பிரிவு 7 ஷா ஆலம் பெரிய அளவிலான திருமண விழாக்களை நடத்த நிர்வாகம் அனுமதித்துள்ளது.
கோவில் பொதுச் செயலாளர் என்.சுந்தரமூர்த்தி கூறியதாவது: கோவில் நிர்வாகத்தினர், அந்த சன்னதியில் மொத்தம் 13 திருமணத்திற்கு முன்பதிவுகளை பெற்றுள்ளதாக கூறினார்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்கள் சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்படுவதோடு, கோவில் பகுதியும் தொடர்ந்து சுத்தப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
பகாங்கில், தனியார் நிறுவன தொழிலாளி எம்.ராஜகோபால், 57, குவாந்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில், தனது மகள் சசிரேகா, 29, இன் திருமணத்தை, நடத்த வசதியாக, பழைய நடமாட்ட கட்டுப்பாடு விதிகள் ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததுக்கு தனது நன்றியை தெரிவித்தார்