கோலாலம்பூர், ஏப் 4- கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள நான்கு நெடுஞ்சாலைகளில் ஒப்பந்த காலம் முடியும் வரை டோல் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் விளைவாக ஒப்பந்த காலம் முடியும் வரை டோல் கட்டணம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அரசாங்கத்திற்கு சுமையை ஏற்படுத்தாமல் மலேசிய குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் அரசின் நோக்கம் மற்றும் கோட்பாடுகளுக்கேற்ப இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் டோல் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில் மலேசிய குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய சுமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. என்றார் அவர்.
இந்நடவடிக்கையின் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தைக் கொண்டு மலேசிய குடும்பத்தின் நல்வாழ்வுக்கு பயன்படக்கூடிய அடிப்படை வசதி திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தில் கெசாஸ் எனப்படும் ஷா ஆலம் நெடுஞ்சாலை, ஸ்மார்ட் எனப்படும் வெள்ள நீர் தணிப்பு மற்றும் சுங்க நிறுவனம், ஸ்ப்ரிண்ட் நெடுஞ்சாலை, எல்.டி.பி. எனப்படும் டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலை ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.