கிள்ளான், ஏப் 4- கிள்ளான் ஆற்றுக்கு புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைந்துள்ள சிலாங்கூர் அரசு, அந்த ஆற்றில் நீர் தரக்குறியீட்டை மேலும் உயர்துவதற்கான சில திட்டங்களை அறிவித்துள்ளது.
சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாட்டுத் திறன் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு மையம் கிள்ளான் ஆற்று நீரைப் பயன்படுத்தவிருக்கிறது. முன்பு இந்த ஆற்றின் நீர் தரக்குறியீடு ஐந்தாம் நிலையில் இருந்தது. அதாவது நச்சுத் தன்மையை இது குறிக்கிறது. இவ்வாண்டு அதன் தரம் 48 விழுக்காடாக பதிவாகி மூன்றாம் நிலைக்கும் மேலாக உள்ளது. அடுத்த ஈராண்டுகளில் அதன் தரத்தை 70 விழுக்காடாகவும் ஐந்தாண்டுகளில் 90 விழுக்காடாகவும் உயர்த்த விரும்புகறோம் என்றார் அவர்.
சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு மையத்தின் முதல் கட்ட நிர்மாணிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் அப்பணிகள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கிறோம். சுத்திகரிப்பு மற்றும் அது சார்ந்த செலவினங்கள் குறைக்கப்படுவதற்கு ஏதுவாக ஆற்று நீரின் தரம் உயர்த்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிள்ளான் ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஓஷியன் கிளீன்ஆப் இண்டெர்செப்டர் 005 படக்குக்கு வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு மையத்தின் ஒவ்வொரு பிரிவும் தினசரி 70 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதி மக்களுக்கு விநியோகிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பட்டார்.