ஷா ஆலம், ஏப் 7- கடந்தாண்டு நடத்தப்பட்ட சிலாங்கூர் வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தின் மூலம் 715 பேருக்கு பணி நியமனம் கிடைத்துள்ளது.
இந்த வேலை வாய்ப்புத் திட்டம் கடந்தாண்டு அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை மாநிலத்தின் ஆறு இடங்களில் நடத்தப்பட்டதாக மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கு கொண்டவர்களில் 1,178 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தகுதி பெற்றதோடு வேலையைப் பெறுவதற்குரிய வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டியதாக அவர் சொன்னார்.
ஆகவே, சிலாங்கூர் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் இவ்வாண்டு ஜூன் மாதமும் அத்தகைய வேலை வாய்ப்புத் திட்டத்தை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு இந்த வேலை வாய்ப்பு பயணத் திட்டம் ஷா ஆலம், கோல சிலாங்கூர், கோல குபு பாரு, உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டன.
சேவை, உற்பத்தி, மின்னியல், நிர்வாகம், வான் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 25,000 வேலை வாய்ப்புகள் இச்சந்தையில் வழங்கப்பட்டன.
இது தவிர வரும் ஜூன் மாதம் ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடத்தப்படவிருக்கும் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு விழாவில் 30,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.