ECONOMYMEDIA STATEMENT

ஷா ஆலமில் மியன்மார் பிரஜை  கொலை- சக நாட்டவர் மூவர் கைது

ஷா ஆலம், ஏப் 13- மியன்மார் பிரஜை ஒருவர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பில் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் இங்குள்ள செக்சன் 25, கடை வரிசையின் பின்புறம் நிகழ்ந்தது.

பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் வயிற்றில் பலத்த கத்திக் கத்துக் காயங்களுடன் இறந்த கிடந்ததைக் கண்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இக்பால் இப்ராஹிம் கூறினார்.

சம்பவ இடத்தில் இரு கத்திகளை போலீசார் கைப்பற்றினர். இறந்த ஆடவரின் உடலுக்கு அருகே ஒரு கத்தியும் சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் குப்பை குவியலுக்கு மத்தியில் மற்றொரு கத்தியும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

இக்கொலை தொடர்பில் உணவுப் பணியாளர்களான 20 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்களும் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்மணியும் சம்பவ இடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கொலையுண்ட நபரின் சடலம் பரிசோதனைக்காக கிள்ளான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :