ஷா ஆலம், ஏப் 20- ரமலான் மாதத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள கோல குபு பாரு தொகுதி 50,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
நோன்பு துறப்பு நிகழ்வுகளை நடத்துவதற்கும் தொகுதியிலுள்ள 22 சூராவ் மற்றும் பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.
ரமலான் மாதத்தின் போது நோன்பு துறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்காக அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர அரசு துறைகள், முதியோர் இல்லங்கள், சூராவ் மற்றும் பள்ளிவாசல்களுக்கு 3,000 பேரீச்சம்பழ பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
வருடந்தோறும் நோன்புப் பெருநாள் சமயத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் நோக்கில் இத்தகைய திட்டங்களை தொகுதி சார்பில் தாங்கள் ஏற்பாடு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.