ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று வரை 1.6 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், ஏப் 23- நாட்டிலுள்ள பெரியவர்களில் 68 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 461 பேர் பூஸ்டர் எனப்படும்  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 63 ஆயிரத்து 644 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 32 லட்சத்து 40 ஆயிரத்து 58 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 17.3 விழுக்காட்டினர் அல்லது 614,507 பேர் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அந்த அகப்பக்கம் தெரிவித்தது.

ஐந்து முதல் 11 வயது வரையிலான அச்சிறார்களில் 41.2 விழுக்காட்டினர் அல்லது 14 லட்சத்து 62 ஆயிரத்து 095 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அந்த அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 92.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 83 ஆயிரத்து 331 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 95.9 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 83 ஆயிரத்து 700 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அது குறிப்பிட்டது.

நேற்று நாடு முழுவதும் 63,169  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 16,352  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 42,039 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,778 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 99 லட்சத்து 38 ஆயிரத்து 295 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 12 மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :