புத்ரா ஜெயா, மே 2- நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கோவிட்-19 நோய்த் தாக்கம் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு கணித்துள்ளது. எனினும், பெரும்பாலும் நோய் அறிகுறி இல்லாத அல்லது லேசான நோய் அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் பாதிப்பாக அது இருக்கும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களாக கோவிட்-19 நோய்த் தொற்றின் நிலவரங்களை சுகாதார அமைச்சு அணுக்கமாக ஆராய்ந்ததில் 99.5 விழுக்காட்டு பாதிப்புகள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்தது கணடுபிடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இந்நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோரின எண்ணிக்கையும் குறைந்ததோடு மரண எண்ணிக்கையும் இறக்கம் கண்டது என்று அவர் சொன்னார்.
நோய்த் தொற்றுக்கு முந்தைய காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 2020 மற்றும் 2021 முதல் ஆறு மாதங்களில் மரண எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனினும், கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை அபரிமித உயர்வு கண்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு 99 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கும் 92 விழுக்காட்டு இளையோருக்கும் தடுப்பூசியும் 70 விழுக்காட்டினருக்கு ஊக்கத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டப் பின்னர் மணர எண்ணிக்கை ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு குறைந்தது என்றார் அவர்.
இந்த சாதகமான சூழல் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் திறப்பதற்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சுகாதார அமைச்சு நான்கு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்துவது, நோய் எதிர்ப்பு மருந்து, பொது சுகாதாரம் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஆகியவையே அந்த நான்கு திட்டங்களாகும் என அவர் சொன்னார்.