ஷா ஆலம், மே 10- தொற்று நோய் பரவியுள்ள இடங்களை கண்டறிவதற்கு மைசெஜாத்ரா செயலியை இனி பயன்படுத்தலாம்.
இந்த தொற்று நோய் கண்டறியும் அம்சம் இணைக்கப்பட்டதன் வழி வெறிநாய்க்கடி, தட்டம்மை, டிங்கி, கை,கால், வாய்ப்புண் நோய் போன்ற நோய்கள் பரவிய இடங்களை அடையாளம் காண இயலும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
நோய்த் தொற்று அபாயம் உள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம் பொது மக்கள் தங்கள் பயண இடங்களை திட்டமிடவும் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை கவனமுடன் மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சு தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது.
நாட்டில் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பொதுமக்கள் இந்த செயலியை ஆக்ககரமான முறையில் பயன்படுத்துவர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அது குறிப்பிட்டது.
கோவிட்-19 நோய்ப் பரவல் அபாயம் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட “ஹோட்ஸ்போட் டிரேக்கர்“ அம்சம் இனி தொற்று நோய்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அண்மையில் கூறியிருந்தார்.