ஷா ஆலம், மே 13- முதல் காலாண்டில் பதிவான அடைவு நிலையின் அடிப்படையில் இவ்வாண்டில் 2,800 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவரை பதிவாகியுள்ள 700 கோடி வெள்ளிக்கும் அதிகமான முதலீடு நல்ல அறிகுறியாகவும் நம்பிக்கையூட்டும் வகையிலும் உள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
வாணிக மற்றும் முதலீட்டுத் துறைகள் நல்ல அறிகுறியைக் காட்டுகின்றன. நிர்ணயிக்கப் பட்ட இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு (சிப்ஸ்) 2022 தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் கடந்தாண்டில் நாட்டில் மிக அதிகமாக அதாவது 750 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டைப் பதிவு செய்தது. இதன் மூலம் 14,393 வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.