கோல சிலாங்கூர், மே 16- பெர்மாத்தாங் தொகுதி நிலையில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தடைபட்டிருந்த இந்த பொது உபசரிப்பு இம்முறை பெர்மாத்தாங் தொகுதி சேவை மைய வளாகத்தில் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார். காலை தொடங்கி நிகழ்வு முடியும் வரை பொது மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறிய போதிலும் மக்கள் இன்னும் எஸ்.ஒ.பி. நடைமுறைகளை கடைபிடித்தது பாராட்டும் வகையில் இருந்தது என்று அவர் சொன்னார். கடந்த ஈராண்டுகளாக நாங்கள் இது போன்ற நிகழ்வுகளை நடத்தவில்லை. மக்கள் பிரதிநிதிக்கும் மக்களுக்குமிடையிலான நட்புறவு வலுப் பெறுவதற்கு இந்நிகழ்வு பெரிதும் துணை புரிகிறது என்றார் அவர். காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/05/MB-Permatang2-960x603.jpg)