ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் 340 கடல்சார் குற்றச்செயல்கள் முறியடிப்பு- ஏ.பி.எம்.எம். தகவல்

புத்ரா ஜெயா, மே 17– இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 340 கடல்சார் குற்றச்செயல்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம்  (ஏ.பி.எம்.எம்.) முறியடித்துள்ளது.

போதைப் பொருள், கெத்தும் மற்றும் விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் கடத்துவது, சட்டவிரோத அந்நியக் குடியேறிகளை நாட்டிற்குள் கொண்டு வருவது, நாட்டின் எல்லைக்குள் அந்நிய நாட்டு மீன்பிடி படகுகள் நுழைவது ஆகியவை அக்குற்றங்களில் அடங்கும் என்று கடல்சார் ஒருங்கிணைப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் லக்ஸ்மணா மூடா ஹிமிட் முகமது அமின் கூறினார்.

வழக்கமாக கிளந்தான் மற்றும் திரங்கானு பகுதியில் ஊடுருவும் அந்நிய மீனவர்கள் இப்போது மிகத் தைரியமாக பூலாவ் தியோமான் வரை ஊடுருவத் தொடங்கிவிட்டனர்.

உள்நாட்டு மற்றும் அந்நிய கடலோடிகளான இவர்கள் நாட்டின் கடல் பகுதியை நன்கு அறிந்துள்ளதே இதற்கு காரணம் என்றார் அவர்.

ஒவ்வொரு துறையும் திட்டமிடலையும் திறனையும் மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் போது ஓப் பெந்தேங் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டதைப் போல் தகவல் பரிமாற்றம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடல்சார் சட்ட அமலாக்க விவகாரத்தில் அனைத்து துறைகளுக்கும் இடையே புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :