ECONOMYMEDIA STATEMENT

மாணவரைப் பலி கொண்ட விபத்து- வாகனமோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு

சிரம்பான், மே 20- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 252வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த மரண விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டியை சிரம்பான் போலீசார் தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் திரங்கானு, கம்போங் பங்கோல் தோம் ஜிரிங்கை சேர்ந்த முகமது நவ்பால் அஜ்மாட் (வயது 19) என்ற மாணவர் தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலியே உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நந்தா மாரோப் கூறினார்.

அந்த மாணவர் யமஹா மோட்டார் சைக்கிளில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் சொன்னார். இந்த விபத்து தொடர்பான தகவல்களைத் தந்து உதவுவதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த விபத்து மூன்று தடங்கள் கொண்ட நேரான சாலையில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் சாலை விளக்குகள் இல்லை. விபத்து நிகழ்ந்த போது வானிலையும் நன்றாக இருந்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர்  சொன்னார்.

இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் அல்லது அதனைப் பதிவு செய்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகம்து ஸமான் முகமது ஹயாலை 012-7173867 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :