ஹனோய், மே 23- இங்கு நடைபெற்று வரும் 31வது சீ போட்டி இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் மலேசியா அணி 39 தங்கப்பதக்கங்களைப் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அந்தப் போட்டி முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்று மலேசிய அணி மேலும் இரு தங்கப் பதக்கங்களைப் பெற்றது.
கலப்பு இரட்டையர் பூப்பந்து போட்டி மற்றும் முவாய் தாய் போட்டிகளில் அவ்விரு தங்கப் பதக்கங்களும் மலேசியாவுக்கு கிடைத்தன. இவ்விரு ஆட்டங்களுடன் மலேசியா சீ போட்டியில் தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இவ்வாண்டு சீ போட்டியில் மலேசிய அணி 39 தங்கம், 45 வெள்ளி மற்றும் 89 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்போட்டியில் 36 தங்கப்பதக்கங்களைப் பெற மலேசிய இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தென்கிழக்காசிய நாடுகளுக்கான போட்டி விளையாட்டில் 204 தங்கம், 121 வெள்ளி மற்றும் 115 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று உபசரணை நாடான வியட்னாம் முதலிடம் பெற்றது.
இரண்டாம் இடத்தில் உள்ள தாய்லாந்து 90 தங்கம், 102 வெள்ளி, 134 வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற வேளையில் 68 தங்கம், 90 வெள்ளி 80 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தோனேசியா மூன்றாம் இடத்தைப் பிடித்த து.
ஐம்பது தங்கம், 69 வெள்ளி மற்றும் 101 வெண்கலப் பதக்கங்களுடன் பிலிப்பைன்ஸ் நான்காம் இடத்தையும் 47 தங்கம், 46 வெள்ளி, 73 வெண்கலப் பதக்கங்களுடன் சிங்கப்பூர் ஐந்தாம் இடத்தையும் பெற்றன.