ECONOMYMEDIA STATEMENT

எல்.ஆர்.டி. கிளானா ஜெயா தடத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு மின்விநியோகத் தடையே காரணம்

கோலாலம்பூர், மே 24- எல்.ஆர்.டி. இலகு இரயில் சேவையின் கிளானா ஜெயா தடத்தில் இன்று காலை ஏற்பட்ட இடையூறுக்கு மின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது.

தாமான் ஜெயா மற்றும் யுனிவர்சிட்டி நிலையங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் உண்டான மின் விநியோக தடையினால் பயணச் சேவையில் இடையூறு ஏற்பட்டதாக ரெப்பிட் இரயில் சென். பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

இன்று காலை 8.36 மணியளவில் ஏற்பட்ட மின் தடை காரணமாக புத்ரா ஹைட்ஸ் தடத்திற்கான சேவை தாமான் ஜெயா நிலையத்தில் தடைபட்டதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

காலை 8.48 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் பெறப்பட்டு பயணச் சேவை தொடரப்பட்டது. சர்க்கியூட் பிரேக்கர் சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இரயிலின் இயக்கம் பாதியில் தடைப்பட்டதை தொடக்கக் கட்ட விசாரணை காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

பயணிகளுக்கு குறிப்பாக, அச்சமயம் வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்களுக்கு இச்சம்பவத்தால் ஏற்பட்ட அசௌர்கர்யத்திற்கு தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அது கூறியது.


Pengarang :