ஷா ஆலம், மே 29- ஜெலுபு சிறையிலிருந்து கடந்த மாதம் தப்பியோடிய கைதிகளில் இன்னும் பிடிபடாமலிருந்த கடைசி கைதியான முகமது ஷியாபிக் ரஹ்மாட் கடந்த வியாழக்கிழமை கோல சிலாங்கூர் அசாம் ஜாவாவில் கைது செய்யப்பட்டார்.
முப்பத்திரண்டு வயதான அந்த கைதியும் 23 வயதுடைய மேலும் இரு ஆடவர்களும் கடந்த 26 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் பிடிபட்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர சூப்பிரிண்டெண்டன் ரம்லி காசா கூறினார்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட கோல சிலாங்கூர் போலீஸ் நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு அந்த மூவரையும் கைது செய்ததாக அவர் சொன்னார்.
இந்த கைது நடவடிக்கையின் போது 455.6 கிராம் ஹெரோயின் அடங்கிய 8 பொட்டலங்கள் மற்றும் 24 கிராம் ஷாபு ஆகிய போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக கூறிய அவர், இந்த போதைப் பொருள்களின் மதிப்பு 17,400 வெள்ளியாகும் என்றார்.
இந்நடவடிக்கையின் போது பிடிபட்ட முகமது ஷியாபிக் ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
கடந்த மாதம் ஜெலுபு போதைப் பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து ஏழு கைதிகள் தப்பியோடினர். அவர்களில் அறுவர் மீண்டும் பிடிபட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் ஒரு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.